Friday, November 28, 2008

சமூக நீதிக் காவலர் மானமிகு.வி.பி.சிங் மறைவு! வீரவணக்கம்! வீரவணக்கம்!


இராம்விலாஸ் பாஸ்வான், வி.பி.சிங், கி.வீரமணி.

வாராது வந்த மாமணி போல் இந்தியாவில் அரசியல் உலகில் தோன்றி சில காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும் வரலாற்றின் பக்கங்களில் யாராலும் அழிக்க முடியாத பதிவை செய்த சமூக நீதிக்காவலர். முன்னாள் இந்தியப்பிரதமர் மானமிகு. வி.பி.சிங் அவர்கள் நேற்றைய தினம் (27.11.2008) இயற்கை எய்தினார்.

ஆண்டாண்டு காலமாய் அடிமைகளாய், கிடந்த சூத்திர மக்களை நிமிரச்செய்த தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதித் தத்துவத்தை வாகை சூடவைத்த பெருமகனார் மானமிகு. வி,பி.சிங் அவர்கள். மண்டல் அறிக்கையை பார்பன. இந்து மதவெறிக் கூட்டங்கள் "ராமன் போதை" என்ற " பக்தி போதையை" எழுப்பி தடுக்க முயன்ற போதும் தனது ஆட்சி பறிபோனாலும் மண்டலை அமுல்படுத்துவேன் என்ற உறுதியுடன் நின்ற செயல் வீரரின் மறையுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

கடந்த 23.12.1992. அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள். பெரியார்- மணியம்மையார் குழந்தைகள் காப்பக கட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, சமூக நீதிக் காவலர் மானமிகு. வி.பி.சிங் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சிலபகுதிகள்- ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பை புரிந்து கொள்ள உதவும்.

மண்டல் ஆணையை நான் நடைமுறைக்குக் கொண்டுவந்தேன். அப்போது, வட புலமே எனக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை. இப்போது நினைவு கூர்கிறேன்.

இரண்டு நாட்களாக நான் தமிழகத்திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையுடனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண்கின்றேன். அது என் மனதை விட்டு அகலாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய தலைவர் தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை கொடுமையை துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்கள். அதற்காகவே உழைத்தார்கள். ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது அவமானம் என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப்பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப்படுவதைவிட கொடுமையானதுதான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. எனவேதான் அந்தக் கொடுமையை துடைத்து எறிவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள்.

சாதி என்ன செய்து கொண்டுடிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை - மனத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். கைகளிலே போடப்பட்ட இரும்புக் கை விலங்குகளை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால் மனத்திலே, அறிவிலே பூட்டப்பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத்தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான் நமக்கு சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.

இந்த நாட்டிலே இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த சாதி அமைப்பின் தலையைப் பார்த்தது மிகச் சரியாகவே அடித்தார்கள்.

நாம் 400 ஆண்டுகளக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்தவர்கள் இங்கே உருவாக்கி வைத்த அடிமைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சினைக்குத் தீர்வே இல்லை.

மண்டல் அமுலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்கவேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமாக ஏழை மக்களுக்கான ரேசன் கார்டு கிடைப்பதைக் கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான் எனவேதான். மண்டல் அமுலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம்.எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனேன்றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகளில், எங்களுடைய ஜனதா தளம்தான் கட்சிப் பொறுப்புகளின் 60 சத விகிதத்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்து இருக்கிறது.அதேபோல நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பிலை. வீரமணி அவர்களே, உங்களை நான் பாரட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்யமுடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப் பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியை விட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.

அரசியலிலே என்னுடைய தோழர் ராம் விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.

Tuesday, November 18, 2008

தமிழக மார்க்சிஸ்ட்களின் அரிய கண்டுபிடிப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் வரதராஜன் அவர்கள் தன்னுடைய அரிய கண்டுடிப்புகளைப் பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக அவ்வப்போது அறிவிப்பது உண்டு. "இந்த வார கண்டுபிடிப்பை" கோவில்பட்டி பொதுக் கூட்டம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

"சினிமா நடிகர்களும், வைகோ போன்றவர்களும் மேடையில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது" - இது தான் அந்த கண்டுபிடிப்பு.

ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராகவே எப்போதும் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவுக் கரங்களை தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் நீட்டி தங்களது இன உணர்வை வெளிப்படுத்தி வருவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆற்றாமையில், எதிர்த்து பேசினால் மக்களிடம் அம்பலப்பட்டுப் போவோம் என்ற பயத்தில் சுற்றி வளைத்து தங்களது நச்சுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தமிழர், இன உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு ஆகிய சொற்கள் எப்போதுமே மார்க்சிஸ்டுகளுக்கு வேப்பங்காயாக கசக்கும். காரணம் கட்சியின் அதிகார மட்டம் முழுதும் நிரம்பியிருக்கும் பூனூல் "மார்க்சிஸ்டுகள்."

"மேடைகளில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது"- எனக் கூறும் வரதராஜன் அவர்களே, உங்களுக்கு நன்றி. தாங்களும், தங்கள் கட்சியினரும் மேடைகளில் முழக்கமிடுகிறீர்களே...மற்ற பிரச்சனைகளான விலைவாசி பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுமா? தொழிலாளர் குறைகளுக்குத் தீர்வு கிடைத்திடுமா? மின் வெட்டுக்கு தீர்வு உருவாகுமா? விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வருமா? மாணவர்களின் உரிமைக் கோரிக்கைகள் தீர்வுக்கு வழிகிடைக்குமா? பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதா? சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற தீர்வு கிடைக்குமா? மக்கள் கேட்கிறார்கள்.

மேடைகளில் முழக்கமிடுவதால் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்றால், நீங்கள் எங்கள் தமிழர்களிடம் வீதி, வீதியாக சென்று வசூல் செய்து மேடைப் போட்டு அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதாக முழங்கி வருகின்றீர்களே! அதை என்னவென்று சொல்லி அழைப்பது?

எங்கள் ஊரின் தேநீர் கடைகளில் அரசியல் பேசிக் கொள்ளும் சாதாரண மனிதன் உங்களின் செயலுக்கு வைத்துள்ள பெயர் "மொல்லைமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்."

வரதராஜன் போன்ற மார்க்சிஸ்டுகளின் உண்மையான நோக்கம் இலங்கைக்குப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் ஈழப்பிரச்சனைக் குறித்த கருத்துப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிந்த வரை கொச்சைப்படுத்துவது, வாய்ப்புப் கிடைத்தால் தடுத்து நிறுத்துவது.

நிச்சயம் உங்களுக்கு அந்த வாய்ப்பை நாங்கள் வழங்கவே மாட்டோம். மேலும், தமிழகத்தின் வீதிகளில் இப்போது தினமும், சமூகத்தின் ஏதாவது ஒரு பிரிவினர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கம் எனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாய்ப்புக் கிடைக்கும் போதொல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழனுக்கும் துரோகம் செய்வதையே தங்களது கொள்கையாக கொண்டுள்ள வரதராஜ மார்க்சிஸ்டுகள் ஏதாவது கூறி இந்தப் போரட்டங்களைத் திசை திருப்ப முடியுமா? என ஆராய்ச்சி செய்து இது போன்ற அரிய கண்டு பிடிப்புகளை அறிவித்து வருகின்றார்கள்.

பெரியாறு பிரச்சனையா? நெய்யாற்று சிக்கலா? இப்படி பல்வேறு சிக்கலில் கேரளாவின் அடாவடிகளுக்கு ஆதரவாய், இருந்து கொண்டு, எதிர்த்து வாய் திறக்காத வரதராஜ மார்க்சிஸ்டுகள், தமிழனுக்குப் பிரசங்கங்கள் வழங்கும் நவீன கதாகாலச்சேப நடிகர்களாக மாறிவருகின்றனர்.

மேற்படி கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் "தோழர்" வரதராஜன் அவர்கள் "தமிழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் அதிகரித்து விட்டனர்" என கூறியுள்ளார். அவரே பல்வேறு மேடைகளில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகளவில் மக்கள் இணைகிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.

இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று எனக்குத் தெரிவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.

Monday, October 20, 2008

ஈழத் தமிழர் துயரங்களை வெளிப்படுத்திய கோவை பெரியார் தி.க. "காயக்கட்டு ஊர்வலம்!"











இலங்கையில், சிங்கள இராணுவம், ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொல்லப்படும் கொடூர நிகழ்வை சித்தரிக்கும் வகையில் கோவை பெரியார் தி.க. சார்பில், 13-10-2008 திங்களன்று, காயக்கட்டு ஊர்வலம் நடைபெற்றது.

பெரியார் தி.க. பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டினன் தலைமையில் நடைபெற்ற இந்த உணர்ச்சிமிகுப் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள படும் இன்னல்களை விளக்கும் விதமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது. காயங்களும், கட்டுகளுமாக கோவை நகரில் ஊர்வலம் வந்தது பொது மக்கள் பலரையும் ஈர்த்தது.

'தமிழ்நாடு முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்" என பெரியார் தி.க. பொதுச்செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டினன் அறிவித்துள்ளார்.

சிங்களவனுக்கு சேவகம் செய்யும் "இந்து" எரிக்கப்பட்டது!

ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி தொடர்ந்து எழுதி வரும் "இந்து" நாளிதழைக் கண்டித்து, கோவை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில், "இந்து" நாளிதழ் எரிக்கப்பட்டது.

தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்தும் - சிங்களவனுக்கு சேவகம் செய்யும் "இந்து" நாளிதழ் எரிகிறது பாரீர்!


Thursday, February 7, 2008

தில்லி சென்ற பெரியார் தி.க.வினருக்கு புதுச்சேரியில் வழியனுப்பு விழா - வீடியோ

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு ‘இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே’ என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. தோழர்கள் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-008 ஞாயிறன்று மதியம் 3.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் தில்லி சென்றனர்.

அப்போது எழுப்பப்பட்ட முழக்கங்களின் வீடியோ பதிவு.

Wednesday, February 6, 2008

தில்லியைக் கலக்கிய பெரியார் தி.க.வின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம்





இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தில்லியில் 6-2-2008 புதனன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன்,விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர்.

"இந்திய அரசே! ஈழத் தமிழர்களைக்

கொல்லும் இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!"


"எங்கள் இரத்தம், எங்கள் இரத்தம்,

ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்"


"தடையை நீக்கு, தடையை நீக்கு,

விடுதலைப் புலிகள் மீதான

தடையை நீக்கு, தடையை நீக்கு"

போன்ற முழக்கங்கள் தில்லியை கலக்கு கலக்கியது.


பேரணி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் அவரது செயலாளரை நேரில் சந்தித்து தமிழக மக்களிடம் இருந்துப் பெறப்பட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மனுவை அளித்தனர்.ஈழத் விடுதலைப் போரின் நியாயத்தை சர்வ தேச சமுதாயம் உணர்ந்துக் கொள்ள உருவாகும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றுவோம்.